தற்போதைய நிலையில் நியூசிந்து அணிக்கு எதிராக போதுமான வெற்றி இலக்கை நிர்ணயிப்பது குறித்து முடிவு செய்ய முடியாது எனவும் நாளைய நான்காம் நாள் முழுவதும் விளையாடுவதே இலக்காகும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மூன்றாவது நாளின் முடிவில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்று இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமாயின் 39 ஓட்டங்களை பெறவேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதுகுறித்து நேற்றைய ஆட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்துக்கூறும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆடுகளம் முதல் நாளைப் போல் இல்லாதபோதிலும் நியூசிலாந்து அணி இரண்டாவது இனிங்ஸில் நல்ல அளவில் மிகச் சரியாக பந்துவீசுகின்றனர். இந்த ஆட்டம் தொடங்கியது போலவே அவர்கள் எங்களுக்கு கடினமாகிவிட்டார்கள். அவர்கள் 65 ஓவர்கள் வீசியுள்ளனர். அவர்கள் நாளை (இன்று) எப்படி பந்து வீசவுள்ளனர் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாளை காலை இந்திய அணி கூடுதலாக ஒரு செஷன் பேட்செய்ய வேண்டும்.
நியூசிலாந்து அணியைக் கட்டுப்படுத்துவதற்கான வெற்றி இலக்கை கணிக்க முடியாது. இன்னும் 6 செஷன்கள் உள்ளன. நியூசிலாந்தை கட்டுப்படுத்துவதற்கு இதுதான் சரியான இலக்காக இருக்கும் என்பதைக் கூறுவதற்கான நிலையிலேயே நாங்கள் இல்லை. நியூசிலாந்தின் முதல் இனிங்ஸ் ஸ்கோரான 348 ஓட்டங்களை நெருங்கினால் வேண்டுமானால் இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கலாம்.
இருப்பினும் அது வெகு தொலைவில் உள்ளது. நேர்மையாகக் கூற வேண்டுமானால் ஒரு நேரத்தில் ஒரு பந்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். காரணம் ஆடுகளம் அப்படி செயல்படுகிறது.
எந்த அளவுக்கு மிகச் சிறிய இலக்கை எங்களுக்கு நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது எங்களுக்கு சாதகமாக அமையும். ரஹானேவும், விஹாரியும் சிறப்பாக பேட் செய்தனர். இதே நிலையில் இருந்து இதே போல் பேட் செய்வதைத் தொடருவதே முக்கியமாகும். அவர்கள் தற்போது நல்ல நிலையை அடைந்துள்ளனர். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என அஷ்வின் மேலும் தெரிவித்திருந்தார்.