இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சௌதி மற்றும் போல்ட் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சின் உதவியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது நியூசிலாந்து.
இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமாயின் 39 ஓட்டங்களை பெற்றாக வேண்டிய நிலையில் கைவசம் ஆறு விக்கெட்டுக்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியது இந்திய அணி.
ரஹானே மேலதிகமாக 4 ஓட்டங்களையும் விஹாரி நேற்றைய ஓட்டத்துடனும் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்து வந்தவர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல இந்திய அணி இரண்டாவது இனிங்சில் 191 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தது.
172 ஓட்டங்களை பெற்ற போது 7 விக்கெட்டுக்களை இழந்த போது ரிசப்த் பந்த் பொறுப்புடன் ஆடி இனிங்ஸ் தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றியிருந்தார்.
பந்து வீச்சில் ரிம் சௌதி 5 விக்கெட்டுக்களையும், போல்ட் 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இந்திய அணியை மிகக் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்திருந்தனர்.
நியூசிலாந்து அணிக்கு 9 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கினை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து.
போட்டியின் ஆட்ட நாயகனாக ரிம் சௌதி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 எனற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.