"இரண்டு வார கால அவகாசத்தை அரசுக்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை உடனடியாகப் பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்."
- இவ்வாறு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்த தேசிய கல்விச் சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய, மேலும் கூறுகையில்,
"ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசு அறிவித்தது. இந்நிலையில், அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்காலக் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை ஒன்றை அரசிடம் முன்வைத்திருந்தோம். அதனை வழங்குவதாகக் கூறி கடந்த அரசு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி மீண்டுமொரு அமைச்சரவை தீர்மானத்தை வெளியிட்டிருந்தது.
இருப்பினும் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததையடுத்து அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இந்த அரசு அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறியிருந்த போதிலும் எந்தத் தீர்மானத்தையும் பெற்றுத்தரவில்லை.
ஆகவே, இடைக்காலக் கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைளை கல்வி அமைச்சில் கையளித்துக் கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்கான அனுமதியைக் கேட்டிருந்தோம். இருப்பினும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்பாட்டத்தின்போது எமக்கு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. ஆகவே , இரண்டு வார காலத்துக்குள் அரசு தகுந்த தீர்மானத்தை பெற்றுத்தரத் தவறும் பட்சத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதியிலிருந்து நாடு முழுவதும் தொடர் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளோம்" - என்றார்.