சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா - தலிபான்கள் இடையே நாளை கட்டாரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் இந்நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்கவுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரச படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க படையினர் ஆப்கானில் நிலைகொண்டுள்ளனர்.
நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது படைகளைத் திரும்பப் பெறவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக, தலிபான்கள்- அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் சாதகமான முடிவு ஏற்பட்டதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா - தலிபான்கள் இடையே கட்டார் நாட்டின் டோஹாவில் நாளை அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பங்கேற்கும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று நேற்றே அவர் கட்டாருக்கு சென்றார்.
இந்த பயணத்தின்போது கட்டார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானியையும் பாகிஸ்தான் பிரதமர் சந்தித்து பேசவுள்ளார்.
இதன்போது இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, பிராந்திய அளவிலான மேம்பாடு குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.