சர்வதேச நீதிப் பொறிமுறையின் கீழ் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்படவேண்டும் என ஜெனீவாவில் சர்வதேச ஜூரிகள் சபை இன்று வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்று அல்லது அது போன்றதொரு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான எஞ்சியுள்ள சாத்தியமான வழியாகும் எனவும் சர்வதேச ஜூரிகள் சபை தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை 43 அமர்வில இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போதே சர்வதேச ஜூரிகள் சபையினர் இதனை வலியுறுத்தினார்.
30-1 மற்றும் 40-1 தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகியுள்ளமை வருத்தத்துக்குரியது எனவும் ஜூரிகள் சபை பிரதிநிதி தெரிவித்தார்.
உலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறையின் ஊடாக இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கான தண்டனை சாத்தியமற்றது என்பது தெளிவாகியது. இந்த விடயத்தில் தனது இயலாமையை இலங்கை நீதி மற்றும் சட்ட அமைப்புக்கள் நீண்டகாலமாக நிரூபித்துள்ளன.
பொறுப்புக்கூறலில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதாக புதிய ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
அத்துடன் சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவர்களாக கருதப்படுபவர்கள் இலங்கையில் உயரிய பொறுப்புக்களில் நியமிக்கப்பட்டுள்ளமை இந்தக் கவலையை மேலும் கூர்மையாக்குகிறது.
உயர் ஸ்தானிகர் குறிப்பிடுவதைப் போல தண்டனை விலக்கு மேலும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் எனவும் சர்வதேச ஜூரிகள் சபையால் சுட்டிக்காட்டப்பட்டது.
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை புறக்கணிக்கும் எந்தவொரு நல்லிணக்க செயல்முறையையும் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக உறுதியாக நிராகரித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையின் உள்ளக நீதி அல்லது பொறுப்புக்கூறல் செயல்முறையும் நம்பத்தகுந்ததாக இருக்க முடியாது என்பது வெளிப்படையானது.
எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்று அல்லது மற்றொரு சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை மட்டுமே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான எஞ்சியுள்ள சாத்தியமான வழியாகும் எனவும் சர்வதேச ஜூரிகள் சபை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளது.