பிரான்ஸில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையான தகவல்களின்படி 191-ஆக உயர்ந்துள்ள அதேவேளை, இதுவரை 3 இறப்புக்களும் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு பிரான்சில் உள்ள காம்பிகேனில் உள்ள ஒரு மருத்துவமனையில் 89 வயது பெண் ஒருவர் நேற்று உயிரழந்ததாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வயதான சீன சுற்றுலாப் பயணி மற்றும் காம்பிக்னே பகுதியைச் சேர்ந்த 60 வயதான பிரெஞ்சு ஆசிரியர் ஆகியோரே பிரான்ஸில் உயிரிழந்த ஏனைய இருவராவர்.
பிரான்ஸில் முதல் நபர் கொரோனோ தொற்றுடன் கண்டறியப்பட்டது முதல் இன்று வரையான காலப்பகுதியில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 பேர் வைரஸ் தொற்றிலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் முழுவதும் வைரஸ் பரவுவதைத் தடுக்க அல்லது குறைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தலைவர் ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட வேண்டிய தேவையில்லாத பகுதி மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை எந்த தடங்கல்களும் இல்லாமல் தொடரலாம். பொதுப் போக்குவரத்து தொடர்ந்து இயல்பாகவே இயங்கும் எனவும் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
கொரோனோ வைரஸ் துரிதமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருந்தபோதிலும், சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு மற்றும் சுகாதார சேவைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரான்ஸில் கொரோனோ தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்ட 12 பிராந்தியங்களில் .ஐந்து பிராந்தியங்களில் 10-க்கும் மேற்பட்ட பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
பாரிஸ் பிராந்தியமான ஆல்-டி-பிரான்ஸ், நாட்டின் மையத்தில் ஆவெர்க்னே-ரோன்-ஆல்ப்ஸ், கிராண்ட்-எஸ்ட் மற்றும் ஹாட்ஸ்-டி-பிரான்ஸ் மற்றும் வடக்கில் பிரிட்டானி ஆகிய பகுதிகளில் அதிக பாதிப்புக்கள் காணப்படுகின்றன.
போர்கோக்னே-ஃபிரான்ச்-காம்டே, பிரட்டாக்னே, கிராண்ட்-எஸ்ட், நார்மண்டி, நோவெல்-அக்விடைன், ஆக்ஸிடானி, பேஸ் டி லா லோயர் மற்றும் புரோவென்ஸ்-ஆல்ப்ஸ்-கோட்-டி அஸூர் ஆகியன பாதிக்கப்பட்ட பிற பகுதிகளாகும்.
இதேவேளை, பிரான்ஸில் பாதிப்புக்கள் உயர்ந்துவரும் நிலையில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையேயான சில விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
ஆனால் பிரான்ஸ் தனது விமான சேவைகளில் எந்த மாற்றங்களையும் அறிவிக்கவில்லை.
எனினும் வரும் நாட்களில் முடிவுகள் மாறலாம் என்பதால் விமானப் பயணத்துக்காக முன்பதிவு செய்தவர்கள் பயணத்துக்கு முன்னர் மீள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு பிரான்சின் ஓயிஸ் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் நேற்று திங்கட்கிழமை அங்குள்ள ஒன்பது நகரங்களில் பாடசாலைகள் மூடப்பட்டன.
அதே நேரத்தில் இங்கு மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
பிரான்சில் கொரோனோ பரவலைத் தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடக்கூடிய கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயான பயணங்களை தவிர்க்குமாறு பிரெஞ்சு குடிமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கட்டி அணைத்தல், கைகுலுக்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.