"நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு பலம்வாய்ந்த கூட்டணியமைத்து போட்டியிடுவதை நோக்காகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டது. எனவே, ஐ.தே.க. பிளவுபடுவதற்கான வாய்ப்பில்லை. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இதற்கு இடமளிக்கமாட்டார்."
- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதேவேளை கூட்டணியின் சின்னம் செயற்குழுவினால் தீர்மானிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பில் காணப்படும் சட்டசிக்கல்களை தீர்த்துக் கொண்டதன் பின்னர் விரைவில் அறிவிப்போம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், மேலும் கூறியதாவது:-
"முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டணியில் பிரதான கட்சிகள் , சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் என்பன ஒன்றிணைந்துள்ளன. கூட்டணியின் ஆரம்பத்துடனேயே தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸவும் அதன் பொதுச் செயலாளராக நானும் (ரஞ்சித் மத்தும பண்டார) நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்துக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் , தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பலம் வாய்ந்த இந்தக் கூட்டணியைக் கண்டு அஞ்சும் சிலர் சட்டத்துக்குப் புறம்பான முறையில் உருவாக்கப்பட்ட கூட்டணி எனச் சித்தரித்து வருகின்றனர்.
வேட்பாளர் தெரிவுக்குழு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நாளை கூடவுள்ளது. அதற்கு அடுத்த தினங்களில் வேட்பாளர் தெரிவுக்கான நேர்முகப்பரீட்சைகள் தொடர்ந்தும் இடம்பெறும்.
இதன்போது ஊழல், மோசடிக்காரர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. நாட்டு மக்கள் விரும்பும் ஊழல், மோசடிகளற்ற கட்சியையே நாம் உருவாக்கியுள்ளோம்.
இந்தக் கூட்டணியில் அதிகளவாக ஐ.தே.கவினரே அங்கத்துவம் வகிக்கின்றனர். அதற்கமைய ஐ.தே.கவின் 95 வீதமான உறுப்பினர்கள் இதில் உறுப்புரிமை பெற்றுள்ளனர்.
கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு, செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சின்னம் தொடர்பான சட்ட சிக்கல்கள் தொடர்பில் தீர்வுகளை எடுத்தன் பின்னர் சின்னம் தொடர்பில் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பலவீனமடைந்துள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி மாறுப்பட்ட கோணத்தில் செயற்பட்டு வருகின்றது. இதன்காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்" - என்றார்.