கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஜேர்மன் ஒட்டுமொத்த சனத்தொகையில் 60 முதல் 70 வீதம் பேர் இறுதியில் பாதிக்கப்படலாம் என அதிகாரிகள் நம்புவதாக அந்நாட்டு அரச தலைவர் ஏஞ்சலா மேர்க்கெல் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுடன் பெர்லினில் இன்று நடத்திய செய்தியாளா் மாநாட்டில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்,
வைரஸுக்கு எதிரான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இத்தாலிக்கு ஜேர்மனியின் ஆதரவை அவா் வெளிப்படுத்தினார்.
அனைத்து நாடுகளும். ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் ஆதரிக்க வேண்டும் என்று மேர்க்கெல் கூறினார்.
ஜேர்மனி நெருக்கடியை ஒருங்கிணைந்த முறையில் சமாளிக்கும் என்று ஏஞ்சலா மேர்க்கெல் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை வியாழக்கிழமை கூடி வைரஸால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராயவுள்ளனர் என்றும் ஏஞ்சலா மேர்க்கெல் மேலும் கூறினார்.
இதேவேளை, ஏஞ்சலா மேர்க்கெல் வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற கருத்து. இது மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என ஜேர்மனில் பல்வேறு தரப்பினரும் கண்டணம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.