ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் 2020 போட்டிகளை நடாத்துவதற்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்புகள் வெளிப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாததாகியுள்ளதாக இன்று ஜப்பான் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் உலகளாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்றுக் கூடிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நான்கு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் பரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியன இன்று அறிவித்துள்ளன.
இதையடுத்து அவுஸ்ரேலிய ஒலிம்பிக் கமிட்டியும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளதுடன், 2021 இற்கு போட்டித் தொடரை ஒத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் இன்று கூடிய ஜப்பான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, போட்டித் தொடரை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாததாகியுள்ளதாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தாங்கள் தற்போதுவரை விருப்பத்துடன் உள்ளதாகவும், ஆனால் காலம் ஒத்துழைக்காத போது அதை ஒத்திவைக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
Category: விளையாட்டு, பகுப்பு
Tags: உலகம்