தமிழ்நாட்டில் முதலாவது கொரோனா மரணமாக இடம்பெற்ற மதுரைக்காரரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் உயிரிழந்தவர் யார் யாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மதுரையில் கொரோனா நோய் தாக்கி உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நாட்பட்ட நோய்கள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு நிமோனியா காய்சலாக இருக்கலாம் என்றும் பின்னர் பன்றிக் காய்ச்சலாக இருக்கலாம் என்றும் கருதி அதற்குரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இருந்தும் அவரது உடல்நிலை மேசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அனுமதிக்கப்படும் போதே அவரது உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்திருந்தது. இந்நிலையில்தான் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 12.20 மணிக்கு உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போது, வெளிநாட்டினர் எவருடனும் தொடர்பு பட்டிருக்கவில்லை என வழங்கிய தகவல் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.
இரண்டு திருமணம் முடித்துள்ள இவர் நிலம், வீடு விற்கும் ரியல் எஸ்ட்டேட் தொழில் செய்து வந்ததாகவும், மதப்பிரச்சாரக் கூட்டங்களுக்கு சென்று வரும் நிலையில் இவரும் பிரச்சார நடவடிக்கைக்கு சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தொழில் நிமித்தம், ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாய்லாந்தில் இருந்து வந்த குழுவுடன் இவர் தொடர்புபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரது இரு குடும்பத்தினர் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களை தனிமைப்படுத்தி வைத்து தீவரமாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.