யாழ் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் பிரதான சந்தைகள் முழுவதும் மூடப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
இவற்றிற்கு மாற்றீடாக பொது இடங்கள், மைதானங்கள் போன்றவாறான பரந்த வெளியில் வியாபாரங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் பயனாளிகள் மற்றும் வறிய குடும்பங்கள் ஆகியோருக்கு அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதோடு மாவட்டத்திற்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் கொண்டுவருவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள அதேவேளை கடற்றொழிலாளர்களும் தற்போது தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது பொதுமக்கள் வீடுகளில் இருத்தவாறே அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் திணைக்களம், வணிகர் கழகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன.
யாழ்மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது பொதுச் சந்தைகளில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றோம். இதனூடாக மக்கள் தேவையற்று பொது இடங்களில் அதிகளவாக ஒன்று கூடுவது தவிர்க்கப்படும் என தாம் நம்புவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் தொலைபேசி அழைப்பின் மூலம் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறிப்பிட்ட வியாபார நிலையங்கள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கிளிகொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
கண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை எதிர்கொள்வதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.