கொரோனா வைரஸ் தாண்டவமாடிய சீனாவின் வூஹான் மாகாணம் நேற்று முன்தினம் வழமைக்குத் திரும்பியுள்ளது. அங்குள்ள கார் மற்றும் மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கத்தொடங்கியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மைபடுத்தல் மற்றும் கிருமி அழிப்பு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வூஹான் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்குள்ள கார் உற்பத்தி ஆலையொன்றில் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்கள் அன்றைய மதிய நேர உணவை ஒவ்வொருவருக்கும் 2 மீட்டர் இடைவெளி விட்டு இருந்து உட்கொள்ளும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வருபவர்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் நவீன கருவிகளுடன் காவலர்கள்!
கிழக்கு சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்ஷோவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் பாதுகாப்பு கடமையில் இருக்கும் பாதுகாவலர் நவீன கருவியை பொருத்திய நிலையில் கடமையில் இருக்கும் புகைப்படமும் வெளிவந்துள்ளது.
பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களது உடல் வெப்பநிலையை அளவிடும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட ஹெட் செட் ஒன்றை குறித்த பாதுகாவலர் அணிந்து கடமையில் ஈடுபட்டிருப்பதை இப்புகைப்படம் வெளிக்காட்டியுள்ளது.
பேரவலத்தை ஏற்படுத்திய கொரோனாவில் இருந்து மீண்டுள்ள சீனா மீண்டும் அதன் தாக்கம் ஏற்படும் போது ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு நவீன தொழில்நுட்ப சாதனங்களை தயாரித்து பயன்பாட்டில் கொண்டுவந்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது.