யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற நேரங்களில் வலிகாம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதான சந்தைகள் இயங்குவதற்கு தடைவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன் பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நடமாடும் சந்தைகளை அமைத்துள்ளதுடன் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வது தொடர்பாக அவசர கூட்டம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது. இச் சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்த பிரதேச சபைத் தவிசாளர் நடனேந்திரன் இது குறித்த மேலும் தெரிவித்ததாவது..
கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பிரதேச செயலகமும் பிரதேச சபையும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இதன் தொடராக இன்று நடைபெற்ற அவசர கூட்டத்திலும் பொது மக்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நேரத்தில் பொது மக்கள் ஒன்றாக திரள்வதைக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கின்றது. அதற்கமைய பிரதேச சபைக்குட்பட்ட பிரதான சந்தைகளில் ஒன்றான சங்கானை மரக்கறிச் சந்தை உள்ளிட்ட சந்தைகளை மூடுவதென்றும் அதற்கு மாற்றீடாக பல்வேறு இடங்களிலும் நடமாடும் சந்தைகளையும் நடமாடும் வியாபாரங்களையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்குவதற்காக பொதி செய்யப்பட்டு அவற்றை வீடுகளிற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அந்தப் பொருட்களை விற்பனை செய்கின்றவர்களும் அதனைப் பெற்றுக் கொள்கின்றவர்களும் மாஸ்க் போன்ற முகமூடிகளையும் மற்றும் குலோஸ் போன்ற கையுறைகளையும் கட்டாயம் பாவிக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஊரடங்கு தளர்த்ப்படுகின்ற நேரத்தில் சந்தைகளிலும் நகரங்களிலும் முட்டி மோதி அவசரப்படாமல் வீடுகளின் வாசல்களுக்கே பொருட்களை அனுப்புவதுடன் சங்கானை சுழிபுரம் வட்டக்கோட்டை அராலி என இணங்கானப்பட்ட இடங்களில் நடமாடும் சந்தைகளை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனர்த்தமான இந்தக் காலத்தில் நடமாடும் வகையில் செயற்பட வேண்டிய தேவையின் அடிப்படையிலையே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது சங்கானை மரக்கறிச் சந்தை அங்கு இயங்காது. ஆகவே அதனைத் தடை செய்து கிராமங்கள் தோறும் நடமாடும் விற்பனை செய்யவுள்ளளோம். அவ்வாறு பொருட்களை பெறுவதற்காக எங்கு சென்றாலும் பொது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். பொது இடங்களில் திரள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். மோசமான நிலைமைகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் இருந்து கொரோனோ நோய்த் தொற்றுப் பரவாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
குறித்த பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் படை அதிகாரிகள் தலைமை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வர்த்தகர் சங்கத்தினர் வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, யாழ்ப்பாணம்