"இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாகக் காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு விடுதலை செய்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது."
- இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
"பயங்கரமான குற்றங்களை இழைத்த படையினர், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் வேளையில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பாரிய தொற்று நோயான கொரோனா வைரஸின் அபாயத்தைப் பயன்படுத்தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கதக்கது எனவும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
"பாதிக்கப்பட்டவர்கள் நீதியைக் கோருவதற்கான உரிமைகள் உள்ளன. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உண்டு" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பல வருடங்களுக்குப் பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015இல் நீதியைப் பெற்றனர். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது" எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை