கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடுத்த நான்கு மாதங்களில் அமெரிக்காவில் 81 ஆயிரத்துக்கும் அதிகமானவா்கள் உயிரிழக்கக்கூடுமென வொஷிங்டன் பல்கலைக்கழக மருத்துத் துறை நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் வரை கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாநிலங்களில் இந்த தொற்று நோயின் உச்சநிலை வரக்கூடும் எனவும் அறிக்கை கூறுகிறது.
எனினும் வெவ்வேறு தரவுககள் இறப்புக்கள் மற்றும் மரணங்கள் குறித்து வேறுபட்ட எண்ணிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. குறைந்தது 38 ஆயிரம் முதல் அதிகபட்சம் 162,000 வரை இறப்புக்கள் இருக்கக் கூடும் என வெவ்வேறு ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.
பல்வேறு பிராந்தியங்களில் வைரஸ் பரவல் விகிதங்கள் வேறுபடுகின்றன. இதன் காரணமாக இந்த மாறுபாடு ஏற்படுகிறது. இதனை வல்லுநா்களால் உறுதியாகக் கணிக்க முடியாமல் உள்ளது என வொஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே கூறினார்.
வைரஸின் பாதிப்பு ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட நீடிக்கும் நிலை தென்படுகிறது. இது நீண்ட கால சமூக முடக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். இருப்பினும் நோயுற்றவர்களை மிகவும் திறம்பட பரிசோதித்து தனிமைப்படுத்த முடியுமானால் விரைவில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என முர்ரே கூறினார்.
இந்தப் பகுப்பாய்வு முடிவுகள் மருத்துவமனைகள் எதிர்கொள்ளப்போகும் அழுத்தத்தையும் தெளிவுபடுத்துகிறது.
வைரஸ் தொற்றின் உச்ச நிலையில் அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகளைப் பராமரிக்க சுமார் 64,000 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படலாம். மேலும் சுமார் 20,000 செயற்கைச் சுவாசக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். நியூயோர்க் நகரம் போன்ற இடங்களில் சுவாசக் கருவிகள் ஏற்கனவே பற்றாக்குறையாக உள்ளன எனவும் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவுகிறது. எனினும் ஏப்ரல் மாதத்தில் உச்சகட்ட தொற்று ஏற்படலாம். அத்துடன் அங்கு சமூக முடக்கல் நடவடிக்கைகள் நீண்டகாலத்துக்கு அமுல்படுததப்படவேண்டி ஏற்படலாம் என்றும் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே கூறினார்.
லூசியானா மற்றும் ஜோர்ஜியா ஆகியவை அதிக அளவில் தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இம்மாகாணங்களின் சுகாதார அமைப்புகள் அதிக சுமைகளை எதிர்கொள்ளக்கூடும் எனவும் முர்ரே தெரிவித்தார்.