வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
காமினி மகாவித்தியாலய வீதி, ஹரவப்பத்தானை வீதி போன்ற பகுதிகளில் நேரடியாக விவசாயிகள் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமையால் பொதுமக்கள் அதிகளவில் வவுனியா நகரிற்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் விவசாயிகள் தவிர்ந்த பலரும் மரக்கறி வியாபாரங்களில் ஈடுபடுவதன் காரணமாகவும் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள உள்ளுர் மொத்த மரக்கறி வியாபார சந்தையின் வியாபாரம் குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள், மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 06.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்தப்பட்டு மாலை 02.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்குரிய மரக்கறிகள் இன்று வந்துள்ளமையினால் மொத்த மரக்கறி வியாபார சந்தையில் அதிகளவான மரக்கறிகள் தேங்கி கிடப்பதை காணக் கூடியதாக இருந்தது.
இவ் மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு முடியாமல் இவ்வியாபாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் தமது பொருட்களை முன்பு போன்றே விற்பனை செய்வதற்கு நடவடிக்கையினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து தர வேண்டும் என்பதே இவ்வியாபாரிகளின் கேள்வியாக உள்ளது.