மன்னாரில் இன்று(30) திங்கட்கிழமை காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும் மக்களின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி, விவசாயம், மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக காவல் துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன் பிடி,விவசாயம்,மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் மக்கள் தமது நகைகளை நகை அடகு பிடிக்கும் நிலையங்களுக்குச் சென்று அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதே வேளை மன்னார் நகரில் நிரந்தரமாக மரக்கறி வியாபரம் மேற்கொண்டு வருகின்ற மரக்கறி வியாபாரிகளுக்கு தம்புள்ளைக்குச் சென்று மரக்கறி வகைகளை பெற்று வருவதற்கான பாஸ் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும், மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்யாத ஏனைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் பலருக்கு மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழக்ஙப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மரக்கறி வகைகளை கொண்டு வந்து விற்பனைகளை மேற்கொண்டுள்ளனர்.
-இதனால் மன்னாரில் நிரந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் புதிய அரச பேரூந்து தரிப்பிட பகுதியில் மரக்கறி வகைகள் கட்டுப்பாட்டு விலையினை விட அதி கூடிய விலைக்கே விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் தெரிவித்தனர்.
எனினும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரக்கறி வகைகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
குறிப்பாக மன்னார் மாவட்டம் சூழவும் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாருக்குள் வருபவர்கள் மற்றும் மன்னாரில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்பவர்களின் தேசிய அடையாள அட்டையினை இராணுவம் பரிசோதனை செய்த பின் செல்ல அனுமதிக்கின்றனர்.