வட மாகாணத்தில் உள்ள மக்களின் பயன்பாட்டில் உள்ள மின்சாரம் மற்றும் குடி நீர் ஆகிய வற்றிற்கான கட்டணத்தை எதிர் வரும் 6 மாதங்களுக்கு அறவீடு செய்யாது இரத்துச் செய்யுமாறு கோரி மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் இன்று (30) திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுகையில்,,,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக எமது நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், சவால்களையும் எதிர் நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக வடக்கில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட ஜீவனோபாய தொழில்களுடன் கூலி தொழில்களையும், வீதியோரங்களில் சிறு வியாபாரங்களையும் மேற்கொண்டு வந்தனர்.
தற்போது நாட்டில் பரவி வரும் உயிர் கொல்லி தொற்று நோயான 'கொரோனா' வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
எனவே அவர்களது சுமைகளை சிறிதளவேனும் குறைக்கும் நோக்கில் அவர்களது மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை மார்ச் மாதம் தொடக்கம் எதிர் வரும் ஆறு மாதங்களுக்கு அறவிடாது இரத்து செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.