இலங்கையின் ஆழ்கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கப்பலொன்றில் 12 ஆயிரத்து 500 மில்லியன் (ஆயிரத்து 250 கோடி) ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த கப்பல் சர்வதேச கடலில் எவ்வித அரச கொடியும் இன்றி பயணித்த நிலையில் கடற்படையினர் அதனைச் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது 500 கிலோகிராம் நிறையுடைய ஐஸ் எனும் போதைப்பொருள் மற்றும் 500 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் எனும் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் இசுரு சூரியபண்டார இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாபுல் எனப்படும் போதைப்பொருள் 200 பைக்கற்றுகளும், அடையாளம் காணப்படாத 100 கிராம் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றின் சரியான மதிப்பு இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும், பொதுவாக சுமார் 12 ஆயிரத்து 500 மில்லியன் (ஆயிரத்து 250) ரூபாவுக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பலை மேலதிக விசாரணைகளுக்காக நாளை (01) திக்கோவிட்ட துறைமுகத்துக்குச் செலுத்திச் சென்று கடுமையான சோதனையிடத் திட்டமிடப்பட்டுள்ளதும் என கடற்படைப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.