கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், மகாராஷ்ட்ராவில் தங்கியிருந்து வேலை செய்துவந்த 400 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தமிழ்நாடு திரும்ப முடியாது தவித்து வருகின்றனர்.
இவ்வாறு தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்துவரும் தமிழ் இளைஞர்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் சரியான உணவு வழங்கப்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர்.
நெட்வேர்க் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்வதற்காக சென்று தங்கியிருந்த தமிழ்நாட்டின் மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 400 இற்கு மேற்பட்ட இளைஞர்கள், மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் பகுதியில் தங்கவைக்கபட்டுள்ளனர்.
அங்கு போதிய உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கிடைக்காத நிலையில் தம்மை சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி செய்துதரக்கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தஅதிகாரிகள் இளைஞர்களை சமாதானம் செய்து நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர்.
வெளி மாநிலத்தை சேர்ந்த பணியாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் உத்ததேவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேலைக்காகச் சென்ற தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நேற்று செவ்வாய் இரவு முதல் உணவு வழங்கப்படவில்லை என்றும் இன்று நண்பகல் 12 மணியளவில்தான் காலை உணவு வழங்கப்பட்டதாகவும், அதுவும் சிறு பொட்டலம் ஒன்றை கொடுத்து இருவர் உண்ணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமாத்திரமல்லாது குடி நீர் கூட கிடைக்காது சிரமப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.