மன்னார்-பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள இராணுவத்தினரின் சோதனைச் சாவடியில் வைத்து கசீஸ் போதைப் பொருளுடன் இரண்டு நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (3) இரவு 11.20 மணியளவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து கொழும்பிற்கு கடல் உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற கூலர் ரக வாகனம் குறித்த பொருட்களை இறக்கி விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வந்துள்ளது.
இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் குறித்த கூலர் வாகனம் இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன் போது குறித்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 65.9 கிராம் கசீஸ் போதைப் பொருள், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலங்கை நாணயத்தாள்கள், மற்றும் மதுபானப் போத்தல் என்பன மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த கூலர் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்த கூலர் வாகனம் அத்தியாவசிய உதவி என்றதன் அடிப்படையில் பாஸ் நடைமுறையூடாக கடல் உணவுகளை கடல் உணவுப்பொருட்களை கொழும்பிற்கு கொண்டு சென்று வந்துள்ளமை தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் மீட்கப்பட்ட போதைப்பொருள், பணம், மதுபானம் மற்றும் வாகனம் ஆகியவை இராணுவத்தினரால் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்