கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல்-15 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாக நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் இன்றைய நிலையில் உலகளாவிய விளையாட்டுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டும் நிறுத்தப்பட்டும் உள்ள போதிலும் ஐ.பி.எல். ரீ-20 கிரிக்கெட் தொடர் நிறுத்தப்படுவதாக இதுவரை திட்டவட்டமான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
ஐ.பி.எல். அணி நிர்வாகத்தினர் வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில் தனியார் விளையாட்டுச் செய்தி ஊடகம் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளைக் கொண்ட தொடரா ஐ.பி.எல். ரீ-20 தொடர் வரும் ஒக்டோபரில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோடையில் ஐ.பி.எல். நடக்காது, ஆனால் தொடர் ரத்து செய்யப்படவில்லை என்று அணி உரிமையாளர்கள் தரப்பில் அதன் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது வெறும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தொடர்பானது மட்டுமல்ல இதைச் சுற்றி பெரிய வர்த்தக வளையம் உள்ளது. எனவே ரத்து என்று கூறுவதற்கில்லை. மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட ஐ.பி.எல். தொடர் சாத்தியமே. இதற்காக பிற டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேசிவருவதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோடைகாலத்தை விட்டால் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் ஐ.சி.சி. தொடர்கள், சர்வதேச இருதரப்பு தொடர்கள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஐ.பி.எல். போட்டிகளுக்காக தியாகம் செய்ய முடியாது.
கோவிட்-19 ஐ இந்தியா முறியடித்தால், ஐ.பி.எல். போட்டிகள் குறிப்பிட்டவாறு நடைபெற்றால் அது உலக விளையாட்டுகளை நடத்த வெளிச்சம் பாய்ச்சுவதாக அமையும் என்று கருதப்படுகிறது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா