அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களைக் காப்பாற்ற முன்னணியில் நின்று போராடும் சுகாதாரப் பணியாளா்கள் சரியான பாதுகாப்பு கவசங்கள் இன்றி தாங்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனா்.
எங்களுக்கு நாளாந்தம் நன்றி தெரிவித்து பலா் கடிதங்களை எழுதுகிறார்கள். சிலர் சாப்பி்ட பீட்ஸாக்களைக் கூட கொண்டு வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு இப்போது உண்மையிலேயே தேவைப்படுவது சரியான முகக் கவசங்கள் உள்ளிட்ட்ட பாதுகாப்பு கவசங்கள்தான் என அவா்கள் கூறுகின்றனா்.
சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் N95 முகமூடிகளைப் பெற போராடி வருகின்றனா். இந்நிலையில் தெருக்களில் நடந்து செல்லும் அவுஸ்திரேலியர்கள் அவற்றை அணிந்திருப்பதைக் காண முடிகிறது.
"ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நிறைய நன்றி கடிதங்கள் கிடைக்கின்றன. சிலர் எங்களுக்கு பீட்ஸாவைக் கொண்டு வருகிறார்கள்" என ஒரு சிரேஷ்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.
“இந்நிலையில் நான் அவா்கள் முன் நின்று எங்களுக்குப் பசி இல்லை. முக கவசங்கள் தான் தேவை ’’ என்று கத்திச் சொல்ல விரும்புகிறேன் எனவும் அவா் கூறினார்.
"நீங்கள் சந்திக்கும் அவுஸ்திரேலியா்கள் பலா் N95 முகமூடிகளைக் அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால் மருத்துவமனைகளில் அவை போதிய அளவில் இல்லை” என நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் அவசர சிகிச்சை மருத்துவ நிபுணா் கூறினார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிட்டத்தட்ட அவுஸ்திரேலியாவில் அரைவாசி அளவான நோயாளா்கள் உள்ளனர். 5,700 க்கும் மேற்பட்ட தொற்று நோயாளா்கள் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா். இங்கு அதிகளவு இறப்புக்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் மருத்துவ பணியாளா்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் கையிருப்புகள் இருப்பதாக அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலவற்றை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுவதாக அவுஸ்திரேலிய அவசரகால மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.
ஆனால் நியூசவுத்வேல்ஸில் உள்ள சில மருத்துவமனை ஊழியர்கள் N95 ரக முக கவசங்களை பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
அவா்கள் பாதுகாப்பற்ற சாதாரண முகக் கவசங்களை நம்பியுள்ளனர் என ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் மேற்கு அவுஸ்திரேலியா மாநிலக் கிளையின் தலைவர் ஆண்ட்ரூ மில்லர் கூறினார்.
N95 முகமூடிகள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கு சா்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை முன்னணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் கோபத்தையும் எதிர்ப்புகளையும் தூண்டியுள்ளது.
அவுஸ்திரேலிய மருத்துவப் பணியாளா்கள் தமக்கான சரியான பாதுகாப்பு கவசங்களை உடனடியாக தேவையான அளவு வழங்கக் கோரி கையெழுத்துப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா் .
இந்த மனுவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 155,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில சுகாதார பணியாளா்களுக்குத் தேவையான 10 மில்லியன் முக கவசங்களை அரசாங்கம் உடனடியாக அனுப்பிவைக்கும் என அவுஸ்திரேலியா சுகாதார அமைச்சா் கிரெக் ஹன்ட் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
"கையுறைகள், பாதுகாப்பு அங்கிகள், பாதுகாப்பு கண்ணாடிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அளவு இன்னும் கையிருப்பில் உள்ளன என ஹன்ட் நைன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவா் தெரிவித்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா