Wednesday 24th of April 2024 01:51:48 AM GMT

LANGUAGE - TAMIL
சுஷில்குமார்
ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் - சுஷில்குமார் நம்பிக்கை!

ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் - சுஷில்குமார் நம்பிக்கை!


ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடைபெறவிருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் என இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளியும் வென்று, ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சுஷில்குமார்.

இம்முறை ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 74 கிலோ எடைப்பிரிவில் தடுமாறியதன் மூலம் வாய்ப்பு மங்கியிருந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுஷில்குமார் அளித்த நேர்காணலின் போதே அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

மல்யுத்தத்தில் இனி சுஷில்குமார் கதை முடிந்தது. அவரால் ஜொலிக்க முடியாது என்று சொல்வதை பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. இப்போதைக்கு நான் எங்கும் போகப்போவதில்லை. ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டதால் எனக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. அதாவது இன்னும் சிறப்பாக தயாராக நேரம் கிடைத்திருக்கிறது.

மல்யுத்த விளையாட்டை பொறுத்தவரை காயமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்கு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி உழைக்க வேண்டும். இதை சரியாக செய்தால் இலக்கை அடைய முடியும். இப்போது நான் தினமும் வீட்டில் இரண்டு முறை பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

மல்யுத்தத்திற்கு ஏற்ப என்னை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். கடவுளின் கருணையோடு ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். தகுதி சுற்றில் என்னால் வெற்றிபெற முடியுமா? என்று கேட்கிறீர்கள். 2011 ஆம் ஆண்டு இதே போல் தான் சொன்னார்கள். அப்போது சாதித்து காட்டினேன். எனவே இது போன்ற சூழலை எப்படி எதிர்கொள்ளவது என்பது எனக்கு தெரியும்.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய சக வீரர் நார்சிங் யாதவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகால தடை ஜூலை மாதத்துடன் நிறைவடைவதால், அவரை தகுதிச் சுற்றில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதற்குரிய நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். மீண்டும் மல்யுத்த வாழ்க்கையை தொடங்க இருக்கும் அவருக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

சக இந்திய வீரர்களைத் தான் நீங்கள் கடுமையான போட்டியாளராக கருதுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். எப்போதும் சிறிய அளவில் யோசித்தால் நீங்கள் எதுவும் சாதிக்க முடியாது. சர்வதேச அளவிலான வீரர்களைத் தான் நான் பிரதான எதிராளியாக பார்க்கிறேன். குறிப்பாக ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்ற உஸ்பெக்கிஸ்தான் வீரர் பெக்ஜோட் அப்துராக்மோனாவை வலுமிக்க எதிராளியாக கருதுகிறேன். அவர் சிறந்த வீரர். அவர் போன்ற வீரர்களை மனதில் வைத்து என்னை தயார்படுத்திக் கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE