நடிகர் விக்ரம் நடிப்புக்கு முழுக்குப் போட்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளிவந்துள்ள தகவலை விக்ரம் தரப்பு மறுத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கும் சியான் விக்ரம் தனது மகனின் திரையுலக பயணத்திற்கு வழிவிட்டு சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளிவந்துள்ள செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இத்தகவல் குறித்து நடிகர் விக்ரம் தரப்பு அறிக்கை விடுத்துள்ளது. அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்த செய்தியைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதை இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விக்ரம் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்துடன் ஒரு படத்திலும் நடிக்கிறார். அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். மேற்சொன்னவை அவரது படங்களில் ஒரு சிலவை மட்டுமே.
எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்பு, அதிகாரபூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்து தெளிவுபடுத்துமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்கிறோம் என்று அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.