கொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்குவதற்கு முன்பாக, கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்க வேண்டாம் என பீபா தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளாவிய கொரோனா பரவுதல் கட்டுக்கடங்காமல் ஒட்டுமொத்த நாடுகளையும் முடக்கிப் போட்டுள்ள நிலையில் சர்வதேச விளையாட்டுத்துறையும் பெரும் முடக்க நிலையை சந்தித்துள்ளது.
உலகக்கிண்ண தொடர்கள், ஒலிம்பிக் தொடர், பிரபல சர்வதேச விளையாட்டு தொடர்கள் என அனைத்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் உள்ள நிலையில் மீண்டும் அவற்றை நடத்த பெரும்பாலான தரப்புகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சர்வதேச விiயாட்டுத் துறையைச் சுற்றி உலகளாவிய வர்த்தகம் பின்னிப்பிணைந்துள்ளதால் பெரும் அதனுடன் தொடர்புடையவர்கள் பெரும் பொருளாதார முடக்கத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில்தான் எப்படியாவது மீண்டும் அவற்றை தொடங்கும் அங்கலாய்பில் பலர் இருந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில் கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்குவது ஆபத்தாகிவிடும் என்று சர்வதே கால்பந்து சம்மேளனம் (பிபா) தலைவர் கியானி இன்பான்டினோ எச்சரித்துள்ளார். இது தொடர்பில் அவர் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது,
நாங்கள் நடத்தும் கால்பந்து போட்டிகள் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது. அதுதான் எங்களது முன்னுரிமை, நோக்கம்.
கிளப் போட்டிகளை நடத்துபவர்களையும் இதை பின்பற்றும்படி அறிவுறுத்துகிறோம். அதை நான் எவ்வளவு வலியுறுத்தி சொன்னாலும் போதாது. எந்த ஒரு ஆட்டம் அல்லது லீக் போட்டிகளுக்காக மனித உயிரை ஆபத்தில் சிக்க வைப்பது சரியானது கிடையாது. ஒவ்வொருவரின் மனதிலும் இந்த விஷயம் தெளிவாக இருக்க வேண்டும்.
நிலைமை 100 சதவிகிதம் பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில் போட்டிகளை மறுபடியும் தொடங்கினால் அது மிகவும் பொறுப்பற்ற செயலாகி விடும். இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ரிஸ்க் எடுப்பதை விட காத்திருப்பதே நல்லது என அவர் மேலும் கூறியிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்