உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கொரோனா, பல இலட்சம் பேரை பாதித்து இலட்சத்துக்கு மேற்பட்டவர்களை ஒருபக்கம் பலியெடுத்து வருகையில் டோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமாக மகேந்திரசிங் தோனி மீண்டும் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க போராடிவருகின்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட டோனி நடப்பு ஐ.பி.எல். தொடரை அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான களமாக எதிர்பார்த்திருந்தார்.
ஐ.பி.எல். ரீ-20 கிரிக்கெட்டின் 13 வது தொடரில் தனது திறமையை நிரூபித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களது கவனத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் தயாராகியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் பொறுத்தே டோனியை மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார். இந்நிலையில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரட்ங்கு நீடிக்கப்பட்டு வருவதால் கால வரையறையின்றி ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கபட்டுள்ளது.
தற்போது 38 வயதாகும் டோனி இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்புகள் மங்கிப்போயுள்ளதாக முன்னாள் வீரர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் இக்கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.
இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவருமான முகமது அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
டோனி அடுத்து என்ன செய்ய விரும்புகிறார் என்பதை என்னை விட அவர் விளக்குவதே நன்றாக இருக்கும். இது அவருடைய சொந்த விருப்பம். கொரோனா பரவலால் இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியாகவில்லை. அதனால் ஐபிஎல் போட்டிகளும் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
இத்தகைய பிரச்சினை எல்லாம் சரியாக கொஞ்சம் நாள் பிடிக்கும். அதே நேரத்தில் டோயை பொறுத்தவரை இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான். அவர் இந்திய அணிக்கு திரும்புவது உளிதான விடயமல்ல.
அப்படி வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும் தேர்வாளர்கள் நிச்சயம் அவரது திறனை பரிசோதித்து பார்ப்பார்கள். ஏனெனில் அவர் நீண்ட காலம் விளையாடாமல் இருக்கிறார். பயி;சி பெறும் விதமாக போட்டிகளில் விளையாடுவது (உள்ளுர் மற்றும் ஐபிஎல் போன்றவை) உண்மையிலேயே மிகவும் முக்கியம்.
நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் தொடர்ந்து ஓரளவு கிரிக்கெட் விளையாட வேண்டும். பயிற்சி மேற்கொள்வது என்பது வேறு, களத்தில் இறங்கி போட்டிகளில் விளையாடி அதன் மூலம் பயிற்சி எடுப்பது என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அசாருதீன் மேலும் கூறியிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா