தெலுங்கு இயக்குநர் விடுத்த சவாலை, பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமவுலி ஏற்றுக்கொண்டுள்ளார்.
தெலுங்கின் முன்னணி இயக்குநர் ராஜமவுலியை நோக்கி தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி சவால் விடுத்திருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் அனைவரும் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர்.
இதையடுத்து, பல பிரபலங்கள் வீட்டில் வேலை செய்யும் காணொளிப் பதிவுகளை தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது ருவிட்டர் பக்கத்தில் புதிய சவால் ஒன்றை தொடங்கியுள்ளார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்யும் காணொளியாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.
இந்தச் சவால் தொடர்பாக சந்தீப் ரெட்டி தனது ருவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு ஆணால் வீட்டு வேலைகளைச் சிறப்பாக செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்ய விடமாட்டார்.
தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN சவாலை ராஜமவுலி அவர்களும் செய்து ஒரு காணொளியாக பதிவேற்றி பலரையும் ஊக்குவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என சந்தீப் ரெட்டி தெரிவித்திருந்தார்.
இந்த சவாலை ஏற்றுள்ள ராஜமவுலி விரைவில் காணொளியை பதிவிடுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.