வடமராட்சியில் திட்டமிட்ட வகையில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த சிறார்கள் இருவர் உட்பட்ட ஐவர்களை உள்ளடக்கிய கொள்ளைக் கும்பல் ஒன்று ஆதாரங்களுடன் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் சிக்கியிருக்கின்றது.
இது குறித்து தெரியவருவதாவது,
கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அவர் அதிர்ச்சி தரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருக்கின்றார்.
அவர் பொலிஸாருக்கு சாட்சியாளராக மாறி சாட்சியம் வழங்கியதன் அடிப்படையில் மற்றைய கொள்ளைச் சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில்,
அண்மையில் வல்வெல்டித்துறையில் 14 வயதுடைய சிறுவன் ஒருவரை மிரட்டி சிகரெட் புகைக்கவைத்திருக்கின்றனர். அதனை தொலைபேசியில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். பின்னர் அந்த சிறுவனை அழைத்து அந்தக் காட்சிகளைக் காட்டி அதனை வீட்டாருக்கு காட்டவேண்டாம் என்றால் வீட்டில் இருக்கும் பொருட்களை, பணத்தினை திருடி வந்து தருமாறு மிரட்டியிருக்கின்றனர்.
தாயார் அரச உத்தியோகத்தில் இருப்பவர் என்பதால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்படும் என அஞ்சிய அந்தச் சிறுவன் 15ற்கும் அதிகமான பவுண் நகைகளையும் பணத்தினையும் திருடிவந்து கொள்ளையர்களுக்கு கொடுத்துவந்திருக்கின்றார்.
அதேபோல ஊரடங்கு வேளையில் வடமராட்சியின் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற இரண்டு வீடுடைப்பு திருட்டுச் சம்பவங்களையும் அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்டமையும் தெரியவந்திருக்கின்றது.
இதேவேளை குறித்த நபர்கள் திருடி பெற்றுக்கொள்கின்ற நகைகளை உடுப்பிட்டியில் இருக்கின்ற நகைக்கடை நடத்தும் பெண் ஒருவரிடம் குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவர் அவற்றை விற்பனை செய்து பணத்தினை கையளிப்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் நகைகளை உருக்கி வேறு நகைகளை செய்வதாகவும் தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் குறித்த பெண்ணும் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொள்ளைச் சந்தேக நபர்களாக ஒப்புதல் வழங்கியிருக்கின்ற நபர்களில் இருவர் 15 வயது சிறுவர்கள் என்றும் மற்றும் இருவர் அண்ணன் தம்பி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கொள்ளையடிக்கின்ற போது கிடைக்கும் பணத்தில் பெரிய அளவில் விருந்துகளுக்காக செலவிடுவதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
2ஆம் இணைப்பு
இதேவேளை பிந்திய தகவல்களின்படி
கொள்ளையடித்து வழங்கப்படும் நகைகளை பணத்திற்கு பெறுகின்ற உடுப்பிட்டி நகைக்கடை உரிமையாளரான பெண் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்,
தான் பெற்றுக்கொள்கின்ற நகைகளை உடுப்பிட்டி மக்கள் வங்கிக் கிளையில் அடகுவைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதிமன்ற உத்தரவின் ஊடாக நகைகளை மீளப்பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஐவரையும் நாளை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி