பிரிட்டன் - ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்களால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி மனிதர்களுக்குச் செலுத்தப்பட்டு நாளை பரிசோதிக்கப்படவுள்ளது.
தன்னார்வ அடிப்படையில் முன்வந்துள்ளவா்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டு வியாழக்கிழமை பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சின் செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
சாதாரணமாக புதிய தொற்று நோய் ஒன்றுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் இவ்வாறான ஒரு கட்டத்துக்கு வர பல ஆண்டுகள் ஆகும். எனினும் பிரிட்டன் ஆய்வாளர்களின் துரித முன்னேற்றம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என ஹான்காக் கூறினார்.
தடுப்பூசிகளில் சிறப்பானதாக, பாதுகாப்பாக உறுதிப்படுத்தப்பட்டால் அதனை பிரித்தானியர்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்யலாம்.
ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான செயல்முறை சோதனையில் தவறுகளும் நேரலாம். ஆனால் வெற்றி இலக்கை அடைய இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்குத் தேவையான வளங்களையும் பெற்றுக் கொடுப்போம் எனவும் அவா் தெரிவித்தார்.
தடுப்பூசி வெற்றிகரமானதாக இருந்தால் கொரோனாவுக்கு வெற்றிகரமாக தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமை எங்களைச் சாரும் எனவும் பிரித்தானிய சுகாதாரச் செயலாளா் ஹான்காக் கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து