மத்திய லண்டனில் சுகாதார சேவையில் முன்னணியில் நின்று சேவையாற்றிவந்த மற்றொரு தமிழ் மருத்துவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் நல மருத்துவ நிபுணரான விஷ்ணா ராசியா என்பவரே உயிரிழந்தவராவார்.
இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் கீழ் பர்மிங்காமில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக விஷ்ணா பணியாற்றிவந்தார்.
மத்திய லண்டனில் மட்டும் இதுவரை குறைந்தது 13 தேசிய சுகாதார சேவை பணியாளா்கள் இதுவரை இறந்துள்ளனர். நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் பராமரிப்பு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனா்.
விஷ்ணா ஒரு அற்புதமான மருத்துவர், நல்ல தலைவர், நல்ல நண்பர். குழந்தைகள் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது அதிக அன்பு கொண்டவா் என அவர் பணிபுரிந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாகி சாரா-ஜேன் மார்ஷ் கூறினார்.
அவரை இவ்வளவு கொடூரமாக, நியாயமற்ற முறையில் இழப்பது நம்மில் பலருக்கும் துயரானது. நிச்சயமாக அவருடைய மனைவி மற்றும் மகளுக்கு அவரது இழப்பு பேரிழப்பாகும் எனவும் அவா் கூறினார்.
திறமையான, அர்ப்பணிப்பான, மரியாதைக்குரிய ஒருவரான டாக்டா் விஷ்ணாவை நாங்கள் இழந்துவிட்டோம் என மருத்துவ இயக்குனர் டாக்டர் பியோனா ரெனால்ட்ஸ் கூறினார்.
அவரது இழப்பு எங்கள் மருத்துவமனையில் அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு மட்டுமல்ல, மத்திய லண்டன் முழுவதும் அவருடன் பணியாற்றிய பலருக்கும் பெரும் துயராகும் எனவும் அவா் கூறினார்.
அவர் ஒரு பெருமைமிக்க கணவர், சிறப்பான தந்தை உயிரிழந்த மருத்துவா் விஷ்ணாவின் மனைவி லிசா கூறினார்.
எங்கள் அன்பான விஷை இழந்தது எங்களுக்கு தாங்க முடியாத துயரம். அவர் அன்பான கணவா். எங்கள் மகள் கேட்லினுக்கு மிகவும் அன்பான அப்பா. தனது முழுக் குடும்பத்தையும் அவா் அதிகமாக நேசித்தவா்.
விஷ் தனது கடமையை நேசித்தார்.
மருத்துவராக பணியாற்றுவதை ஒரு வேலை என்பதை விட சேவையாகவே அவா் கருதினார்.
அவர் கவனித்த ஒவ்வொரு நோயாளியையும் தனது சொந்தமாகக் கருதினார்.
அவா் நோயோடு போராடியபோது வொர்செஸ்டர்ஷைர் ரோயல் மருத்துவமனையின் ஊழியர்கள் தயவு, இரக்கத்துடன் உதவினா். கடந்த சில வாரங்களாக அவர்கள் எங்களுக்கு வழங்கிய கவனிப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் எனவும் உயிரிழந்த மருத்துவரின் மனைவி லிசா கூறினார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து