ஐரோப்பாவில் இரண்டாவது அதிக தொகை கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடாக பிரிட்டன் பதிவாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இங்கு இதுவரை 26 ஆயிரத்துக்கு அதிகமானவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைக்கு பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதில் கூற வேண்டும் என விமா்சனங்கள் எழுந்துள்ளன.
நேற்றுவரை பிரித்தானியாவில் கொரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 26,097 ஆக பதிவாகியுள்ளது.
முதல் முறையாக மருத்துவமனைகளுக்கு வெளியே நிகழ்ந்த உயிரிழப்புக்களையும் இங்கிலாந்து பொது சுகாதார துறையினா் வெளியிட்டுள்ளனா்.
இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸை விட அதிக உயிரிழப்புக்களை சந்த்தித்த நாடாக பிரிட்டன் பதிவாகியுள்ளது. எனினும் தற்போதுவரை இத்தாலியை விட பிரிட்டனின் உயிரிழப்புக்கள் குறைவாகவே உள்ளன.
உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகளவு உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது.
"நாங்கள் தொற்றுநோயின் உச்சத்தில் இருக்கிறோம். இது ஆபத்தான தருணம்" என " பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக முடக்கல் அறிவிப்புக்களை பிரிட்டன் மிகத் தாமதமாகவே வெளியிட்டது. இதுவே தொற்றுக்கள் மற்றும் மரணங்கள் அதிகரிக்கக் காரணமாகி விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதிகளவான இறப்புக்கள் தொடா்ந்து பதிவாகி வரும் நிலையில் பிரதமா் ஜோன்சனுக்கு நாட்டில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
கொரோனா தொற்று சோதனைகளை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அத்துடன் மருத்துவமனைகளுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் அரசின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை எனவும் விமா்சனங்கள் எழுந்துள்ளன.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து