சமூக முடக்கலைச் சாதகமாக்கி மனைவிக்கு ஊசி மூலம் நஞ்சூட்டி கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியாவைப் பூா்வீகமாகக் கொண்ட தாதி ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
இவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்த சிட்னி பொலிஸாா் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து எதிர்வரும் ஜூலை இரண்டாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னி ஹெபர்ஷாம் பிரதேசத்தில் டேல் க்ரோவ் என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற அன்று அசாதாரண உடல் நிலையை தான் உணா்ந்ததாக பாதிக்கப்பட்ட 38 வயதான பெண் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து உடனே தன்னை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு கணவரிடம் கேட்டதாகவும் அவா் கூறியுள்ளாா்.
எனினும் தற்போதைய கொரோனா தொற்றுக்காலத்தில் வைத்தியசாலைக்கு போவது பாதுகாப்பானது அல்ல என்று கூறிய கணவர் , வீட்டில் வைத்து தனக்கு மருந்து ஏற்றியதாகவும் அவா் பொலிஸாரிடம் கூறியுள்ளாா்.
மருந்து ஏற்றப்பட்டு எட்டு மணிநேரங்களாக மயக்க நிலையிலிருந்த இப்பெண், செவ்வாயிரவு அரைமயக்கத்தில் எழுந்து தனக்கு ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளதை உணர்ந்துள்ளார். உடனடியாக அவசர சேவைக்கு அழைத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த பொலிஸாா், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனா் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் நஞ்சூட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 45 வயதான பெண்ணின் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளாா். அவருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து பொலிஸாா் , நீதிமன்றத்தில் முற்படுத்தினா். எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனது 19 வருட திருமணவாழ்வில் இப்படியொரு துரோகம் இடம்பெற்றிருக்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை . இந்த சம்பவத்தை நினைத்தால் அருவருப்பாக உள்ளது என பாதிக்கப்பட்டுள்ள பெண் தெரிவித்துள்ளாா்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா, சிட்னி