கொரோனா வைரஸ் ஒழிப்பில் முன்னணியில் செயற்பட்டுவந்த இந்திய பெண் மருத்துவ நிபுணர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியா கேரள மாநிலத்தை புர்வீகமாக கொண்ட மருத்துவர் பூர்ணிமா நாயர் (வயது-55), இங்கிலாந்து கவுண்டி டர்ஹாமில் உள்ள பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். புகழ் பெற்ற மருத்துவ நிபுணரான இவருடன் சேர்த்து கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து முன்வரிசையில் நின்று போராடுகிற மருத்துவர்களையும், தாதியரையும், சுகாதார பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அந்த வகையில், மருத்துவர் பூர்ணிமா நாயரையும் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி கொரோனா வைரஸ் தாக்கியது.
அதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஸ்டாக்டன் ஆன் டீஸ் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரைக் காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் கடுமையாக போராடினார்கள்.
மார்ச் 27-ந் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர் பணியாற்றிய பிஷப் ஆக்லாந்து ஸ்டேஷன் வியூ மெடிக்கல் சென்டர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை வருமாறு,
அனைவரால் நேசிக்கப்பட்டவரும், மதிப்புமிக்கவருமான மருத்துவர் பூர்ணிமா நாயர் இறந்து விட்டார் என்பதை அறிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.
மருத்துவர் பூர்ணிமா நாயர் நீண்ட காலமாக கொரோனா வைரஸ் தாக்கிய நிலையில் மிகுந்த மன வலிமையுடன் உயிருக்கு போராடி வந்தார். ஆனாலும் அது பலனற்று பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இதற்காக வருத்தப்படுகிறோம். எங்கள் நினைவுகளிலும், பிரார்த்தனைகளிலும் மருத்துவர் பூர்ணிமா நாயர் எப்போதும் இருப்பார் என அவ் அறிய்கையில் கூறப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து, இந்தியா, கேரளா