யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து தெரிவிக்கப்படுவதாவது,
கடந்த இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்தவேளை, ஊரடங்கு வேளை என்பதால் படையினர் மறித்ததாகவும் அதற்கு கட்டுப்படாத அந்த இருவரும் படையினர் மீது கல்லால் எறிந்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். கல்லால் எறிந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடராக இன்று அதிகாலை 1.30 மணியளவில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் சென்றபோது படையினர் வழி மறித்ததாகவும் அவரும் நிறுத்தாது சென்றபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவத்தின் போது இளைஞரின் இடது கை மற்றும் கால் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த இளைஞரும் இராணுவச் சிப்பாயும் மந்திகை வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், பருத்தித்துறை