பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் தமன்னா மீண்டும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹொலிவுட் பட உலகையே திரும்பி பார்க்க வைத்த படம், ‘பாகுபலி’. அதன் இரண்டாம் பாகமான ‘பாகுபலி-2’ வும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, வசூலில் மிகப்பெரிய சாதனை புரிந்தது. இயக்குநர் ராஜ மவுலிக்கு மேலும் புகழ் சேர்த்தது.
தற்போது ராஜமவுலி, ‘ஆர் ஆர் ஆர்’ (ரவுத்திரம் ரணம் ருத்திரம்) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். ராம்சரண் ஜோடியாக அலியாபட்டும், ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக இங்கிலாந்து நடிகை டெய்சியும் நடிக்கிறார்கள். “இந்தப்படத்தில் தமன்னா இல்லையா?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அவர்களை ராஜமவுலி ஏமாற்ற விரும்பவில்லை. ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில், தமன்னாவுக்காக ஒரு சண்டை காட்சியை வைத்து இருக்கிறார். “இந்த சண்டை காட்சி தமன்னாவுக்காக திணிக்கப்படவில்லை. திரைக்கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது” என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.