சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகள் முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றமையை தடுத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளையில் நடைபெறுகின்ற தமிழரசுக்கட்சி முன்னெடுக்கின்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் நடைபெற்றிருந்தது,
நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற முன்னாள் முதலைமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட்டவர்கள் இராணுவத்தினரின் சோதனை நிலையங்களில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்ட மாவை,
மக்கள் பிரதிநிதிகள் நினைவேந்தலுக்காக சென்றதை தடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியாது. மனிதாபிமான நிகழ்வுகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்குகொண்டிருந்தனர்.
நிகழ்விற்கு தமிழரசுக்கட்சியின் வாலிபர்முன்னணியின் யாழ்.மாவட்டத் தலைவர் பிருந்தாபன் தலைமை தாங்கினார்.
Category: செய்திகள், புதிது
Tags: மாவை சோ.சேனாதிராஜா, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்