ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் புற்றுநோயை உண்டாக்குவதாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் உண்டானதன் காரணமாக பலநூறு கோடி டொலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது.
அந்த நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடா் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.