இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் எந்தவொரு நாட்டுடனும் குழுவுடனும் இணைந்து போரிடத் தயாா் என ஈரான் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக இணைந்து போராடும் எந்தக் குழுவுடனும், எந்த நாட்டுடனும் இணைந்து சண்டையிட ஈரான் தயாராக உள்ளது. இதைக் கூறுவதற்கு எந்தத் தயக்கமும் ஈரானுக்கு இல்லை என அலி காமெனி தெரிவித்தாா்.
இஸ்ரேல் அரசை அகற்றுவது என்பது இஸ்ரேல் மக்களை அகற்றுவது அல்ல. எங்களுக்கு இஸ்ரேல் மக்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் அவா் குறிப்பிட்டாா்.
மத்தியக் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானும், இஸ்ரேலும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதலில் ஈடுபடுகின்றது. சிரியாவுக்கு ஆதரவாக ஈரான் ராணுவம் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக, வெஸ்ட் பங்க் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பாலஸ்தீன ஜனாதிபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார் . இந்த நிலையில் ஈரான் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து அரபு நாடுகள் கடும் அதிருப்தியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.