ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் கொரோனா தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நீண்டகால பராமரிப்பு மையங்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்ட கனேடியப் படையினா் 28 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஆயுதப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உதவிப் பணிகளில் ஈடுபட்ட 5 படையினா் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அதில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்ராறியோவில் உதவி நடவடிக்கைகளில் பங்கேற்ற 12 படையினரும் கியூபெக்கில் 16 படையினரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளனா்.
கனேடிய இராணுவத்தினா் கிட்டத்தட்ட 1,700 போ் கொரோனாவால் அதிகளவானோா் பாதிக்கப்பட்டு பராமரிப்பு இல்லங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக இரணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கியூபெக்கில் 25 நீண்ட கால பராமரிப்பு இல்லங்களிலும், ஒன்ராறியோவில் ஐந்து இல்லங்களிலும் இராணுவத்தினா் உதவி மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்
சுத்தம் செய்தல், உணவு பரிமாறுதல் மற்றும் குடியிருப்பாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகளில் பராமரிப்பு இல்லங்களில் படையினா் ஈடுபட்டுள்ளதாகவும் கனேடிய இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா