இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 6 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 25 ஆயிரத்தை கடந்துள்ளது.
அண்மைய நாட்களில் தினசரி ஐயாயிரத்துக்கு மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 24 மணிநேரத்திலும் 6 ஆயிரத்து 654 பேர் இனம் காணப்பட்டுள்ளனர். இதன ;மூலம் மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 137 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மே-17 அன்று 4,987 தொற்றாளர்கள், மே-18 அன்று 5,242 தொற்றாளர்கள், மே-19 அன்று 6,154 தொற்றாளர்கள், மே-20 அன்று 5,611 தொற்றாளர்கள், மே-21 அன்று 5,609 தொற்றாளர்கள், மே-22 அன்று 6,088 தொற்றாளர்கள், மே-23 அன்று 6,654 தொற்றாளர்கள் என கடந்த 7 நாட்களில் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை ஐயாயிரத்துக்கு மேற்பட்டதாகவும் தொடர்ச்சியான அதிகரிப்பு நிலையிலும் காணப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 44 ஆயிரத்து 588 தொற்றாளர்கள் இதுவரை இனம் காணப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 1,517 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 753 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 98 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 13 ஆயிரத்து 268 தொற்றாளர்களும், டெல்லியில் 12 ஆயிரத்து 319 தொற்றாளர்களும் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, புது தில்லி