மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோறகுயினை (hydroxychloroquine) கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை. இதனால் நோயாளிகள் இறக்கும் அபாயமே அதிகம் இருப்பதாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹைட்ராக்ஸிகுளோறகுயின் மருந்தை உட்கொண்டால் இருதயப் பிரச்சனைகள் வரும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில் இந்த மருந்தை தான் எடுத்துக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தாா்.
இதனை எடுத்துக் கொள்ளுமாறு டிரம்ப் தொடர்ந்து மக்களை அறிவுறுத்தி வந்தார்.
ஹைட்ராக்ஸிகுளோறகுயின் மருந்து மலேரியாவின் சிகிச்சைக்காக பயன்படுத்துவது பாதுகாப்பானது. அர்திரிடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், கொரோனா தொற்றாளர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் ஏதும் பரிந்துரைக்கவில்லை.
96,000 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 15,000 பேருக்கு ஹைட்ராக்சிகுளோறகுயின் மருந்தோ அல்லது இதை ஒத்த மருந்தோ அளிக்கப்பட்டது.
இந்த மருந்து அளிக்கப்பட்டவர்கள் மற்ற கொரோனா நோயாளிகளை விட மருத்துவமனைகளில் அதிகம் இறக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இருதய பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஹைட்ராக்ஸிகுளோறகுயின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்தது. இதை ஒத்த குளோரோகுயினை உட்கொண்டவர்களின் இறப்பு விகிதம் 16.4 சதவீதமாக இருந்தது.
இந்த மருந்துகளை நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுடன் சேர்ந்து உட்கொண்டவர்களில் இறப்பு விகிதம் மேலும் அதிகமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்