கிளிநொச்சி இரணைமடுக்குளத்தில் போதியளவு நீர் உள்ளபோதும் தமது சிறுபோகச்செய்கைக்கு உரிய நீர் வழங்கப்படாமையினால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் கருகி அழிவடையும் நிலையில் காணப்படுகின்றன என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் 29 அடிக்கு மேல் காணப்படுகின்றநிலையில் பன்னங்கண்டி, மற்றும் ஊரியான், ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 14ம் திகதி பெய்த மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டது எனவும் தற்போது கடும் காற்றுடன் வெயிலும் அதிகரித்துள்ளதார் வயல் நிலங்கள் வறண்டுபோயுள்ளன.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோதும் தமக்கான நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் தங்களுடைய வயல் நிலங்கள் நீர் இன்றி கருகி அழிவடையும் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கேட்டபோது, வாய்க்கால்கள் துப்பரவு செய்யப்படாமையினால் தொடர்ச்சியாக நீர்விநியோகிப்பதில் தடை ஏற்பட்டது. இப்போது விவசாயிகளுக்கு போதியளவு நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி