ரமலானை ஒட்டி ஆப்கானிஸ்தானில் அரசு - தலிபான்கள் இடையே 3 நாட்கள் போா் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்கள் ஈத் போர் நிறுத்தத்தை தலிபான் மிதவத அமைப்பினா் நேற்று சனிக்கிழமை அறிவித்தனா். இதனை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆப்கானிஸ்தானில் அரச படைகள் மற்றும் தலிபான்கள் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தற்காலிக போா் நிறுத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.
"எதிரிகளுக்கு எதிராக எந்தவொரு தாக்குதலையும் எங்கும் மேற்கொள்ள வேண்டாம். எதிரிகள் உங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்" என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் ருவிட் செய்துள்ளார்.
புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஈத் பண்டிகைக்காக மட்டுமே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி தலிபானின் போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்று அதற்கு சம்மதம் வெளியிட்டாா்.
”படைகளின் தளபதியாக நான் மூன்று நாட்கள் சண்டை நிறுத்தத்துக்கு இணங்கியுள்ளேன். இந்த மூன்று நாட்களும் தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம். தாக்கினால் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்" என்று அவர் ருவிட்டரில் கூறியுள்ளாா்.
ரமலான் மாதம் முழுவதும் போா் நிறுத்தத்துக்கு கடந்த மாதம் அரசாங்கம் அழைப்பு விடுத்தபோதும் தலிபான்கள் அதனை நிராகரித்தனா்.
இதனையடுத்து அங்கு நீடித்த மோதல்களால் ரமலான் மாதத்தில் மட்டும் தலிபான்களால் 146 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 430 பேர் காயமடைந்தனர் என்று நாட்டின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல் நேந்று சனிக்கிழமை தெரிவித்தார்.