தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் டிக்கோயாவில் இடம்பெற்றுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், எட்டு பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
டிக்கோயா தரவலை தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான அம்பிகா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். டிக்கோயா தோட்ட 18ஆம் இலக்க தேயிலை மலையில் அவர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், மரத்திலிருந்த குளவி கூட்டை கழுகு கொத்திய நிலையில் குளவிகள் கலைந்து வந்து வேலை செய்தவர்களை கொட்டியுள்ளது.
இதில் ஆறு பெண்களும் இரண்டு ஆண்கள் உட்பட சாரதி ஒருவருமாக ஒன்பது பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய எட்டு பேரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக, ஹட்டன் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அத்ததோட்ட பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.