பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் வயோதிப தம்பதி உடல்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு சென்னையில் இடம்பெற்றுள்ளது. இவர்களது உயிரிழப்புக்கு காரணம் கொரோனாவா என்பதை கண்டறிய உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்களால் காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வீட்டை உடைத்து பார்த்த போதே முதியவர்கள் இருவரும் உயிரிழந்து சடலமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதி உடல்களை மீட்டு காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டிருந்தனர். கடந்த வாரம் கொரோனா பரிசோதனைக்காக சுகாதாரத்துறையினர் சென்ற போது குறித்த இருவரும் ஒத்துழைக்காது அடம் பிடித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அழுகிய நிலையில் இருந்த வயோதிப தம்பதியினர் ஜீவன்-தீபா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து உடல்களை மீட்ட காவல்துறையினர் கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.