"இன்று மக்களுக்கு வாழ்வது கடினமாகவுள்ளது. அவர்களிடம் பணம் இல்லை. தொழில் இல்லை. வருமானம் இல்லை. மாத இறுதியில் அத்தியாவசிய பொருட்களும் முடிந்து விடுகின்றன. 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தைக் கூட வழங்க முடியாத பரிதாப நிலையில் இந்த அரசு உள்ளது."
- இவ்வாறு முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
"நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்று மாளிகாவத்தையில் மூவர் உயிரிழந்த சம்பவம் இலங்கையின் பொருளாதார நிலைமையைத் தெளிவாகக் காண்பிக்கின்றது. 1500 ரூபாவுக்ககா உயிரை இழக்கும் வகையில் இன்று மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மக்களுக்கு வாழ்வது கடினமாகவுள்ளது. அவர்களிடம் பணம் இல்லை. தொழில் இல்லை. வருமானம் இல்லை. மாத இறுதியில் அத்தியாவசிய பொருட்களும் முடிந்து விடுகின்றன. 5 ஆயிரம் ரூபா நிவாரணத்தைக் கூட வழங்க முடியாத நிலையில் இந்த அரசு உள்ளது.
அரச ஊழியர்களுக்கு பண்டிகைக் கொடுப்பனவை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும் இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை என்ன என்பது தெளிவாகின்றது.
இந்த வருடத்தில் கடனைத் திருப்பி செலுத்த முடியாத நாடுகள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆஜென்டீனா, ஈக்குவாடோர் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளே இவ்வாறு கடனைத் திருப்பி செலுத்த முடியாத நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நாடுகள் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இவ்வாறு கடனை மீளச் செலுத்த முடியாத நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடிக்கக் கூடும் என்று உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆசிய நாடுகளிலிலேயே இலங்கையில் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையிலுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 87 வீதமாகும். இவ்வாண்டின் இறுதிக்குள் அந்தக் கடன் தொகை 93 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2021ஆம் ஆண்டாகும்போது இந்தக் கடன் தொகை நூற்றுக்கு நூறு வீதமாகும்.
2023ஆம் ஆண்டு நாம் செலுத்த வேண்டிய கடன் தொகை 10 பில்லின் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கக் கூடும். இந்த வருடத்தில் மாத்திரம் 3 பில்லின் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வருடத்தின் ஒக்டோபர் மாத்தில் நாளொன்றுக்குள் மாத்திரம் ஒரு பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டியேற்படும்.
நாட்டின் பொருளாதார நிலைமைக்கு அமைய ஆடை மற்றும் சுற்றுலாத்துறை தொழிலாளர்களின் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். குறுகிய காலத்துக்குள் வெளிநாட்டு வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை எம்மால் இனங்காணப்பட வேண்டும். ஸ்திரமற்ற நிலைமையில் அல்லாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.
நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நிதி நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை அரசு உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனினும், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. இறுதியாக மார்ச் 23 ஆம் திகதி அரசின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அது முழுமையாகத் தேர்தலுக்கான நிதி பற்றியதாகும். எனினும், மார்ச் மாதத்தை விட தற்போது காணப்படும் பொருளாதார நிலைமை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. தற்போது அது காலம் கடந்த ஒன்றாகிவிட்டதைப் போலாக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு நாடாளுமன்றத்தைத் தற்போது நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் புதிய யோசனையொன்றை நிறைவேற்றியுள்ளனர். நாம் தற்போதும் அவ்வாறானதொரு நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமலுள்ளோம்.
நிதி தொடர்பான யோசனையைத் துரிதமாகச் சமர்ப்பிப்பது அரசின் கடமையாகும். அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இது எண்ணிக்கை அல்லது இலக்கம் தொடர்பான பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினையாகும். வாழ்தல் மற்றும் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை ஆகும். எனவே, நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் உண்மை நிலைமையை அரசு நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம்.
அவ்வாறின்றி தற்போது முகங்கொடுத்துள்ள எந்த நெருக்கடியிலிருந்தும் எம்மால் மீள்வதற்கான வழிமுறையை இனங்காண முடியாது" - என்றுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), ரணில் விக்கிரமசிங்க, இலங்கை