தலாவக்கலை பிரதேசத்தில் தோட்டத்து வலையில் சிக்கிய அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று இன்று (மே-26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
தலாவக்கலை, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் இன்று (மே-26) காலை வேளையில் அரிய வகை கருஞ்சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலையால் அமைக்கப்பட்டிருந்த மரக்கறி தோட்ட பாதுகாப்பு வேலியில் சிக்கிய நிலையில் இக்கருஞ்சிறுத்தையின் அலறல் சத்தத்தை கேட்ட தோட்டத் தொழிலாளர்கள் சென்று பார்த்த போதே சிறுத்தை வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரதேச காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனாண்டோ, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.
இதன் போது, வனத்துறை அதிகாரி கூறுகையில், இப்புலியானது உயிருடன் இருப்பதால் மிருக வைத்திய அதிகாரி வருகை தரும் வரை அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
தன் பின்னர் கருஞ்சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு வலையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. 6 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இவ்வாறு மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை 8 வயதுடையது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தையின் வலது முன்னங்காலில் காயமேற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.