கொரோனா சமூக முடக்கம் காரணமாக பொது போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதை அடுத்து தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வழியில் பட்டினியால் தாய் உயிரிழந்தமை தெரியாது பச்சிளம் குழந்தை தாயை எழுப்பும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து தெரிய வருவதாவது,
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால் ரெயிலில் ஏறும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பசி, உடல் வெப்பம் அதிகரிப்பு மற்றும் நீர்ச்சத்து குறைந்த நிலையில், ரெயில் முசாபர்பூரை நெருங்கும்போது அவர் இறந்துள்ளார்.
அவரது உடல் ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாய் இறந்ததை அறியாத அவரது பச்சிளம் குழந்தை, தாயை எழுப்ப முயற்சிக்கிறது. தாய் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை இழுக்கிறது. அந்த குழந்தையை மூத்த குழந்தை தடுத்து வெளியே இழுக்கிறது. இதைப் பார்த்த அனைவரும் கண்ணீர் விட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதே ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தையும் உயிரிழந்துவிட்டது. அந்த குழந்தையின் பெற்றோர் டெல்லியில் இருந்து வந்த மற்றொரு சிறப்பு ரெயில் மூலம் வந்தவர்கள்.
நான்காவது கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் திகதி வரை நடைமுறைப்படுத்தபபட்டு வரும்நிலையில் இலட்சக் கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் சரியான உணவு உண்ண முடியாமல் பசி பட்டினியுடன் அந்தரித்து வரும் இவர்கள் பலகீனமான நிலையிலும் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன்போது ஏராளம் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பது தொடர்கதையாகி வருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா