கொழும்பு புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்கட்டிடம் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டு அங்கிருந்த 200 க்கு அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (மே-27) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கடற்படையினரில் ஒருவர் இக்குடியிருப்பில் தங்கியிருந்ததை அடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என கடற்படை தரப்பில் தெரிவித்துள்ளது.
குறித்த கட்டிடம் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டது எனவும் அங்கு சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர் புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை உறுப்பினர் என சுகாதார பிரிவு குறிப்பிட்டிருந்தது.
இதன் காரணமாக குறித்த கட்டிடத்தில் தங்கியிருந்த கடற்படை சாரதிகள் உள்ளிட்ட 200க்கும் அதிகமானவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை